Saturday, December 30, 2006
வைகோ கொலைப்பழி சுமத்தி திமுக'வில் வெளியேற்றப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் நேரில் பார்த்தேன். மதுரை திமுக பவள விழா மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாய் பேரணி வண்டியூர் தெப்பக்குளத்தில் துவங்கியது. அங்கு நான் படித்த பள்ளியின் முன் பேரணியில் கலந்து கொள்ள நானும் நின்றிருந்தேன். கருப்பு நிற அம்பாசிடர் காரில் மதிய உணவுக்கு பின் வெத்தலை போட்டிருந்த வாயுடன் வந்திறங்கினார் வைகோ.( அப்போது நான் பார்த்த மற்றோரு சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வு) . என் பள்ளியின் அருகில் வக்கில் பாபு என்பவரின் வீட்டின் முன் இறங்கிய வைகோ ஒரு சொம்பில் தண்ணிர் வாங்கி வாய் கொப்பளித்தபடி தன் காரின் டிக்கியில் இருந்து ஒரு துணிப்பதாகையை எடுத்து சிலரிடம் கொடுத்து ஏதோ உத்தரவிட்டு கொண்டிருந்தார். வைகோ வைகோ என என்னுடன் இருந்தவர்கள் ஓட நானும் ஓடி கைகொடுத்து மகிழ்ந்தேன். அடுத்த பத்தாண்டுகள் நான் அதிகம் உச்சரிக்க போகும் பெயர் அது என அப்போது தெரியாது.
அவரின் பேச்சுக்கள் என் ரத்தத்தை திராவகமாய் மாற்றின, ஈழப்பிரச்சினையில் அவரின் உறுதி (இன்று வரை) இயல்பாய் அவரிடம் கொண்டு சேர்த்தது. ஸ்பார்ட்டகஸும் நெப்போலியனும் கிரேக்க வரலாறுகளும் அவரின் குரலில் மேலும் ஏகாந்தம் பூசிக்கொண்டு வெளிவந்தன. காளிமுத்து திமுக வை விட்டு வெளியேறிய போது கலைஞரை மேடையில் இருத்தி " ஒரு வீபிடனன் போனாலென்ன, ஓராயிரம் இந்திரஜித்துகள் இங்கே இருக்கிறோம்" என பேசிய அவரின் பேச்சு செவிபுலன் நன்கமையப்பட்ட எந்த தமிழனைத்தான் ஈர்க்காது. ராசிவ் கொலை காரணம் காட்டி ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மாநில மத்திய ஆள்தூக்கி சட்டங்களால் வேட்டையாடப்பட்ட போது பிரபாகரனும் புலிகள் இயக்கமுமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என தமிழ்நாட்டு தெருக்களில் முழங்கித்திரிந்த வைகோ எப்படி என் போன்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் .
எல்லாம் முடிந்தது, வைகோ நீக்கபட்டார், தான் தான் உண்மையான திமுக என உரிமைகோரினார். திருச்சியிலே போட்டி பொதுக்குழு கூட்டினார். நானும் இருந்தேன் அங்கு. சரியாய் நினைவிருக்கிறது அந்த பொதுக்குழு முகப்பில் இருந்த வாசகம் " பாடி வீட்டில் கூடி நிற்கிறோம்' போர் நடத்த இது ஒத்திகை - பகைவருக்கு இனி ஏது நித்திரை" வாசலில் நாஞ்சில் சம்பதண்ணன் நின்று கொண்டு அனுமதி சீட்டு சரி பார்த்து உறுப்பினர்களை அனுமதித்துக்கொண்டிருந்தார். அதன் பின் ஏப்பிரல் 16- 1994 அன்று சென்னையில் பேரணி நடத்தி தனது வலிவை காட்ட முனைந்தார். தமிழகம் அது வரை கண்டிராத மாபெரும் பேரணி அது.
அந்த பேரணி முடிவில் துவங்கியது வைகோவின் ஊசலாட்ட அரசியல், அந்த பிராமாண்ட பேரணி முதல்நாள் மதியம் 2 மணிக்கு துவங்கி அடுத்தநாள் காலை 8 மணிவரை தொடர்ந்து கொண்டிருந்தது. வைகோ கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் மறுநாள் காலை5.55 க்கு துவங்கிய உரையில் தெரிந்தது, அந்த கூட்டம் வைகோ எனும் தங்களின் ஆதர்ச தலைவனின் நீக்கத்துக்கு எதிராயும் அதற்கு புலிகளை குற்றம் சாட்டிய தங்கள் இயக்கத்துக்கு எதிராயும் திரண்டிருந்தது. தன் பேச்சின் இடையே கூட்டத்தினை பார்த்து கேட்டார் "நமது அரசியல் எதிரி யார்?" என்று. கூட்டம் கருணாநிதி என ஆர்ப்பரித்தது. அதற்கு வைகோ " இல்லை ஜெயலலிதா" என விடையுரைத்து தன் முதல் தவறினை அரங்கேற்றினார். அந்த பேரணிக்கு பிறகு மே மாதத்தில் புதிய இயக்கம் துவங்கினார். அன்றைய ஜெயலலிதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என சூளுரைத்து ஜூலை மாதத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் துவங்கினார். நானும் துவக்கம் முதல் நாள் இனைந்தேன் பயணத்தில்.
அடுத்த வருட ஏப்பிரலில் தேர்தல் வந்தது, திமுகவில் வைகோவின் பிளவை "செங்குத்தான பிளவு" என வர்னித்து சுய இன்பம் அனுபவித்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்ஸிட்) யுடன் மறுமலர்ச்சி திமுக கூட்டணி கண்டது. " தோற்பதற்கு இனி தொகுதிகள் இல்லை" என நாஞ்சில் சம்பத் அண்ணன் கிண்டலாய்ச்சொல்லுவார் அது போன்றதொரு தோல்வி கண்டது அக்கூட்டணி. மதிமுக தொண்டர்களை பற்றிய பெருமிதமான மதிப்பீடு ஒன்று எப்போதுமே ஒன்று எனக்குள் உண்டு,அது அவர்களின் தோல்விகளை தாங்கும் பக்குவம். இன்னும் இருபது தேர்தல்களை கூட சந்தித்து தோத்தாலும் அவர்கள் துவள மாட்டார்கள் என்பது திண்ணம்.
27 மறுமொழிகள்:
-
ஆவணப்படுத்தும் முயற்சி!
வரவேற்கிறேன்.
ஆனால் 'தொடரும்' போட்டுவிட்டீர்களே!
'காடாறு மாசம்; நாடாறு மாசம்' ஆச்சே! -
இன்று விகடன் பார்த்தீரா?அப்படிப்பட்ட ஒருவர் தன்னை நிலைநிறுத்த முடியாமல் போகக்காரணமென்ன?உணர்ச்சிவசப்படுதலா?இல்லை முதுகில் குத்தத் தெரியாததாலா?
-
நேரடியான அனுபவங்களினூடாக எழுதப்படும் பதிவு நேர்மையாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள் செந்தில்.
-
மேடை நடிகன் வைகோ, தி.மு.க
ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை
தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ள
வரையில் அக்கட்சிக்கு விடிவுகாலம்
கிடையாது.இருபது தேர்தல்கள் வரலாம்.
ஆனால்கட்சிஇருக்கவேண்டுமே.அரசியல்விபச்சரியான இந்தகோமாளி, மட தி.மூ.க வை கலைத்துவிட்டு காளி
முத்துவின் இடத்தை நிரப்புவதே சாலச்சிறந்தது.
ஒருபுறம் கண்ணீர்,மறுபுறம் சிரிப்பு
சிவாஜியை மிஞ்சும் இவனது நடிப்பு.
காலத்தின்பார்வையில் இவனொரு கோமாளி,இவனை மீண்டும் தாங்கிய
என் தலைவன் ஒரு ஏமாளி. -
- This post has been removed by a blog administrator.
-
நான் என்றைக்கும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர். அவர் அரசியல் அஸ்தமன காலத்தை நாம் நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் அளவிடமுடியா வருத்தமே.
2000 புத்தாண்டு பிறந்த அன்று அவரது பொதுக்கூட்டத்தில் இருந்தேன். வாழ்வில் மறக்க முடியாத புத்தாண்டு அது. -
துருவ நட்சத்திரமாய் துவங்கி, வால் நட்சத்திரமாய் மறைந்து கொண்டிருப்பவர் வை.கோ.
அவருடனான உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முன் வந்தமைக்கு நன்றி. -
வரவனையான்,
மிகவும் அருமையான பதிவு. மறைந்த முதல்வர் அமரர் MGR அவர்களுக்குப் பிறகு ஈழத்தமிழர்களால் மரியாதையோடும் பாசத்தோடும் நேசிக்கப்படும் தமிழகத் தலைவர் அண்ணன் வைகோ என்றால் அது மிகையாகாது. அண்ணன் வைகோ அவர்களை அமெரிக்காவில் இரு தடவைகள் சந்தித்து அளவளாவும் அரிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன். குறிப்பாக ஜெயலலிதாவால் பொடாச் சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்த பின் அமெரிக்கா வந்திருந்த போது கண்ணீர் மல்க அவரை ஆரத் தழுவி அளவளாவிக் கொண்டது இப்போதும் கண்முன் நிற்கிறது.
அண்ணன் வைகோ அவர்கள் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வென்ற போது, ஏதோ ஈழத்தில் இருந்து டெல்லி நாடளுமன்றத்திற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தது போன்ற உணர்வே எனக்கும் பல ஈழத் தமிழர்களுக்கும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
என்னைப் பொறுத்த வரையில், தற்போதுள்ள தமிழக அரசியல்வாதிகளில் மிகவும் கண்ணியமானவர், நேர்மையானவர் அண்ணன் வைகோ அவர்களே. பெருந் தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பக் கூடிய ஒரே ஒரு தலைவரும் இவரே.
தமிழகத்தின் தலைவிதி, அதிகமான தமிழகத் தமிழர்கள் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருப்பது. சும்மா, வெறும் கவர்ச்சி/சினிமா அரசியலிலும் , இலவச சலுகைகளிலும் மயங்கி வாக்குப் போடும் ஒரு கூட்டமாகவே தமிழக மக்களில் பெரும்பாலானோர் இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந் நிலமையைப் பார்க்கும் போது,
"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை" எனும் கவியரசரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
எப்படி மறைந்த முதல்வர் அமரர் MGR உயிரோடு இருக்கும் வரை திமுக வால் ஆட்சி ஏற முடியவில்லையோ , அதே நிலைதான் இப்போது அண்ணன் வைகோ அவர்களுக்கும். ஆனால், கலைஞருக்குப் பின் அண்ணன் வைகோ தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்வார். அதனால் தான் அவரை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட திமுக முனைப்போடு செயற்படுகிறது. திமுக வைப் பொறுத்த வரையில் அவர்களின் எதிரி ஜெயலலிதா இல்லை, அண்ணன் வைகோ அவர்களே. -
மாறன் மறைந்தபோது அவர் மனைவி
கூட அவ்வளவு அழுதிருக்கமாட்டார்,
அந்த அளவிற்க்கு தன்துக்கத்தை வெளிப்
படுத்திய இந்த கோமாளி இப்பொழுது
பாராளுமன்றத்தில் சிலைவைக்குமளவிற்கு
மாறனுக்கு தகுதி கிடையாது என்கிறார்.
இந்த "பலநாக்கு பலவேசத்தை" ப் பற்றி
என்ன கூறுவது. -
Vaiko used to be a favourite of not only mine, but also for most of dmk supporters long time ago. He needs to be blamed for his ills. The day he put his personal agenda ahead of the party, his decline started.
Prabhakaran and LTTE never took DMK's hand of support; instead annihilated all other groupswho in a way were fond of DMK leadership and DMK reciprocated that.
Vaiko has no credibility left today; if not today, he will be finished tomorrow.He atlease had a fair chance of taking over DMK, if he stayed with DMK during the last election. Now not only Maran and Stalin, but everyone in DMK would ensure that he does not get a foothold. The person who split DMK for his personal gains has no right to talk about DMK trying to split his party. We only feel sad for those you like you who still stick to him and ruining your lives.
It will be better for DMK and Tamil cause if people like you return to DMK to help it retain some of the original principles for which it was found; we can prevent this becoming a private property soon.
SP -
வைக்கோ ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு போராளியும் கூட, கந்தகத்தீவு நோக்கி பயனம் செய்த போராளி, போரிற்கு பயந்து நாமெல்லாம் கந்தகத்ததீவை விட்டோடும் போது, போராளிகள் மட்டுமே அதை நோக்கி வருவார்கள்.
அந்தநேரத்தில் வைக்கோவிற்கு மத்தியில் நல்ல பதவி, நல்லபடிப்பு,தேவையான சொத்து, அன்பான மனைவி பிள்ளைகள் அனைத்தும் இருந்தன, ஒருமனிதனுக்கு இதை விட வேறென்ன வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஓடி ஓடி உழைப்பது இதற்காகத்தானே. அவை எல்லாம் இருந்தும் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்தகத்தீவை நோக்கி பயனம் செய்யும் தைரியம் யாருக்கு வரும்? ஒரு போராளியைத்தவிர எவருக்கும் வராது, இந்த போராடும் குணம் ஒன்றே வைகோவை உயர்த்திவைக்கும் இது நிட்சயம். -
வேதனையோடு பகிர்கின்றேன்,
நண்பர்களே .. வைகோவை நன்றாக தெறிந்தவன் நான்.. சிறந்த நடிகர்..அழகிய பொய்யர்..
மேடையில் மட்டுமே தமிழ் முழக்கம்.. இறங்கினால் "ஏமிரா !! செப்புரா" கொதித்தது நெஞ்சம்..பல கோடி சொத்துக்கள் , கல்லூரி ,மற்றும் பல பினாமி பெயரில் இருந்தும் ,,, பிதற்றுவது கரைபடாதவன் என்று... ஈழ ஆதரவு போர்வையில் தன் சுந்தர தாய் மொழி இனததை மறைதது தமிழனாக காட்டிக்கொள்வது..ந்ம்பாதிர்கள் பசுத் தோல் போத்திய பொய் புலி -
//இன்னும் இருபது தேர்தல்களை கூட சந்தித்து தோத்தாலும் அவர்கள் துவள மாட்டார்கள் என்பது திண்ணம்//
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள் தோழர். -
மூளையற்ற முண்டங்கள் தமிழ்நாட்டவர்.
தலைக்கு வெளியேயும் அதிக மூளையுள்ளவர்கள் ஈழத்தமிழர்.என்ற
அரிய கருத்தை வெளிப்படுத்திய
"வெற்றி" அவர்களுக்கு நன்றி.வைகோ
போன்றவர்கள்தமிழ்நாட்டில்இருந்து கொண்டு தங்கள் வாழ்வை விரயம் செய்கின்றனர்.நேரடியாக வவுனியா
காடுகளுக்கு சென்று போராடினால்
தலைவர் பிரபாகரன் இடத்தை வெகு
எளிதில் நிரப்புவதற்கு வாய்ப்புகள்
அதிகம்.
"அண்ணன் வைகோ அவர்கள் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வென்ற போது, ஏதோ ஈழத்தில் இருந்து டெல்லி நாடளுமன்றத்திற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தது போன்ற உணர்வே எனக்கும் பல ஈழத் தமிழர்களுக்கும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை."
உண்மையான கருத்து, என்வே தயவு
செய்து வைகோ வை இலங்கைக்கு
அழைத்துச்செல்லுங்கள்.தமிழகம்
பிழைக்கட்டும். -
"அழகிய பொய்யர்.."
என்ற பெருமையான பட்டத்தை நண்பர்
வைகோவிற்கு வழங்கிய அருமை
நண்பா அனானி, நீ இருக்கும் திசை
உன்னை வணங்குகின்றேன். -
அருமையான பதிவு...அடுத்த பதிவை சீக்கிரம் தாருங்கள்
-
"அழகிய பொய்யர்.."
என்ற பெருமையான பட்டத்தை நண்பர்
வைகோவிற்கு வழங்கிய அருமை
நண்பா அனானி, நீ இருக்கும் திசை
உன்னை வணங்குகின்றேன்.
அதைக்கூட அனானி வடிவில் வந்து வழங்கிய அவரது தைரியம் பாராட்டத்தக்கது, இதில் இருந்து தெரியும் அவரது உனமைத்தன்மை. -
"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை"
சரியாக கூறினீர்கள் வெற்றி.வைகோ அவர்களை கலிங்கப்பட்டியிலேயே வைத்திருந்தால் கலைஞருக்கு இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது.
அன்று ஒரு கூத்தாடி,
இன்று ஒரு கோமாளி.
எதையும் சந்திப்பார்,எதிலும் வெற்றி
கொள்வார் என் தலைவர் கலைஞர். -
20 தேர்தல் என்ன, 200 தேர்தல்ல
தோத்தாக்கூட அசரமாட்டோம்.
நாங்கள்லாம் வடிவேலு வகையறா
தெரியும்ல.
ஆனாலும் நண்பா குட்டபுஸ்கி
உமக்கு லொள்ளு மிகவும் அதிகம்.
வஞ்சப்புகழ்ச்சி வரவணையான் வாழ்க. -
கருனாநிதிக்குப் பிறகு திமுகவில் பெரிய உடைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் வைகோ திமுக-வுடன் இருந்தே ஸ்டாலினுக்கும்,தயாநிதிக்கும் இடையில் இருந்து குழிபறிப்பு வேலைகள் செய்திருக்கலாம்.
ஆனால் பாவம் இவருக்கு எல்ஜி, செஞ்சி போல வஞ்சம் செய்யத்தெரியவில்லை.
அரசியலில் நேர்மை மட்டும் இருந்தால் போதாது, கொஞ்சம் சாணக்கியத்தனம், சூழ்ச்சிகளும் தெரிந்திருக்கவேண்டும். இவற்றின் மொத்த உருவம் தான் கருனாநிதி. -
தி.மு.க என்ன கம்மாக்கரையா?
சின்ன உடைப்பு,பெரிய உடைப்பு
ஏற்படுத்த.குணக்கேடன் எம்.ஜி.ஆரால்
முடியாததை இந்த நவரசநாயகனால்
எப்படி ஏற்படுத்த முடியும்.
தி.மு.க எஃகு கோட்டை.மோதினால்
மண்டைதான் உடையும். -
"ஏமிரா !! செப்புரா" இது முற்றிலும் உண்மை. இதனால்தான் விஜயகாந்துக்கும் இவருக்கும் ராசி.
அவர் ஊரை சேர்ந்தவன் என்பதால் எனக்கு இது தெரிந்தது. வெளியே இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரியாது -
"தி.மு.க என்ன கம்மாக்கரையா?
சின்ன உடைப்பு,பெரிய உடைப்பு
ஏற்படுத்த.குணக்கேடன் எம்.ஜி.ஆரால்
முடியாததை இந்த நவரசநாயகனால்
எப்படி ஏற்படுத்த முடியும்.
தி.மு.க எஃகு கோட்டை.மோதினால்
மண்டைதான் உடையும்."
எம்ஜிஆரை பற்றி சும்ம வீண்பேச்சு பேசாதீர்கள், அவர் இருக்கும் வரை கருனாநிதியால் ஆட்சிக்கு வரமுடிந்ததா? அவரைவீழ்த எந்த பேயுடனும் நான் கூட்டு சேர்வேன் என்று கலைஞர் சொன்னது இன்னமும் பதிவாக இருக்கிறது. -
செந்தில் எனது இன்னொரு பின்னூட்டம் இன்னமும் வரவில்லை?
-
//திமுக வைப் பொறுத்த வரையில் அவர்களின் எதிரி ஜெயலலிதா இல்லை, அண்ணன் வைகோ அவர்களே. //
சிங்கம் எந்தக் காலத்திலும் எதிரியாக எலியை நினைப்பதில்லை....
ஈழத்தமிழர்கள் சிலருக்கு வைகோ மீது ஈழப்பிரச்சினையில் அவரது நிலைப்பாடு காரணமாக அளவிட முடியா அன்பு இருப்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது. இதே அன்பு இதே பிரச்சினைக்காக எங்களுக்கும் அவர் மீது உண்டு.
அதற்காக தங்க கம்பி என்பதால் அதை எடுத்து கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா என்ன?
வைகோவின் Capacity என்னவென்று தமிழகத் தமிழர்களுக்கு தான் தெரியும்... ஈழத்தமிழர்களுக்கு தெரிவது துரதிருஷ்டவசமாக "காற்றடைத்த பலூன்" போன்ற வைகோவின் மாயத் தோற்றமே.... உண்மை என்ற ஒரு ஊசி போதும்... அந்த மாயப் பிம்பத்தை உடைக்க.... -
//எம்ஜிஆரை பற்றி சும்ம வீண்பேச்சு பேசாதீர்கள், அவர் இருக்கும் வரை கருனாநிதியால் ஆட்சிக்கு வரமுடிந்ததா? //
எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போதே, இரட்டை இலையுடன் அதிமுக மோதியபோதே 86 உள்ளாட்சித் தேர்தலில் திமுக 85 சதவிகித வெற்றி பெற்று சாதித்துக் காட்டியது. 80 பாராளுமன்றத் தேர்தலிலும் இரட்டை இலை படுமோசமாக மண்ணைக் கவ்வியது.
காது குத்துவதாக இருந்தால் மதுரைப் பக்கம் யாராவது கெழவி இரட்டை இலையை பச்சைக் குத்திக் கொண்டு இருப்பாள். அங்கே போய் குத்துங்கள் :-))))))


பேச்சு , எப்படி அண்ணா தன் பேச்சால் தமிழர்களை கவர்ந்தாரோ அப்படியே வைகோ .
மேடைப்பேச்சு உணர்ச்சியை எல்லா நேரத்திலும் கடைபிடித்ததாலேயே வீழ்ச்சி .