Monday, July 06, 2009

@ 10:46 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்









ஊடும் பாவுமாய் நீரிலையும்
வண்ணத்துப்பூச்சியின் உடலாய்
வாழ்க்கை - நிலம் பார்த்து விரிந்து கிடக்கும்
சிறகினில் மெல்ல கவிழும் இருள்
சலனமற்று பார்த்தவாறே இருக்கிறான்
காலக்கிழவன்

Tuesday, June 09, 2009

@ 8:17 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


மாரிமுத்துக்கு கோபாலிடமிருந்து வரும் அழைப்பை போல அலுப்பான விதயம் வேறொன்றுமில்லை. கோபால் இடமிருந்து அழைப்பு வந்தாலே ஒரு வித நடுக்கம் கொஞ்ச நாளாய் தனக்கு வருவதை அறிந்திருந்தான்.

"துயரத்தில் துயரம் பெருந்துயரம் அத்துயரம்
துயரத்தில் எல்லாம் தலை"ன்னு

இவனா அவனுக்குன்னு எழுதிய குறள் வேறு நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. காரணம் என்னான்னா கோபால் மாரிமுத்துவின் ஊரில் மிக பெரிய"தல" ஒன்றின் ஓட்டுநராக இருந்தான். மாரிமுத்துவோ அவ்வப்போது அந்த தலைக்கு "சொம்படித்து" பொழைப்பை பார்த்து வருபவன். எனவே கோபாலின் தேவைக்கு இவனுக்கு வேண்டியதாய் இருந்தது. எவனாவது காது கொடஞ்சுகிட்டே "அப்புறம் "தல" எங்க'ன்னு சும்மானாச்சுக்கும் கேட்ட கூட "பூஸ்டர்" பேக் போட்டிருக்கிற மொபைல எடுத்து "ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"ன்னு கேட்டு ஒரு வித தோடுடன் "கவுஞ்சிகிட்ட இருக்காங்கலாம், அரை மணி நேரத்துல வீட்டுல இருப்பாராம் போய் பாருங்க'ன்னு சீன் போடுவான். ஆனா உண்மையில் அவன் பேசியது கோபாலிடம் அந்த உரையாடல் இப்படியாய்த்தானிருக்கும்.

"ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"

"யோவ் சும்மா நொய்யு நொய்யின்னு கால் மணிக்கு ஒரு தடவை போன் பண்ணாதேன்னு எவ்வளவு தடவையா சொல்லுறது; அரை மணி நேரத்துல தல வீட்டுக்கு வா"

இப்படி எரிந்து விழும் கோபால் "தல" ஊருக்கு போயிட்டாலோ அப்படியே டிட்டோவாக மாறிவிடுவான் "எங்கையா போயிட்ட ஆளே காணாம், நீ ரொம்ப பிசியான ஆளு எங்களையெல்லாம் கண்டுக்குவியா... நீயிதான் பெரிய தொழிலதிபர் ஆயிட்ட ( "தல" மாரிமுத்துக்கு ஒரு டூபாக்கூர் அரசு அலுவலகத்துக்கு முன் டீக்கடை நடத்திக்கொள்ள அனுமதி வாங்கி கொடுத்திருந்தார். அந்த ஆபீஸோ மதியம் 2 மணிக்கெல்லாம் ஈ,காக்காகூட பறக்காத ஏரியாவாகிவிடும். அவன் கேட்டது அரசு பொதுமருத்துவமனையில், தமிழ்நாட்டில் பிசியாக இருக்கும் ஒரே அரசுத்துறை அதுதானே, அதனால் அங்கு கேட்டான். ஆனால் அந்த இடத்தை "நடிகர்" கட்சியிலிருந்து மொத நாள் வந்தவனுக்கு கொடுத்துவிட்டு, மாரிமுத்துக்கு இந்த பாடாவதி இடத்தை மாரிமுத்துவின் தலையில் கட்டிவிட்டார். "நடிகர்" கட்சியிலிருந்து வந்தவன் தன் பெயருக்கு டீக்கடை மாறியவுடன் "தலை"யின் வாயில் வாழைப்பழத்தை வைத்துவிட்டு மீண்டும் தாய்க்கழகத்துக்கு போய்விட்டான் என்பது இப்பிரதியின் கிளை வயித்தெறிச்சல்) ஒரு போன்கூட பண்ணுறதுல்ல

இப்படி தொடங்கும் உரையாடல் மேற்படி மேட்டரில் வந்து முடியும், ஏன்யா கெமினோ'ன்னு ஒரு சரக்கு இருக்கே அது நல்லாருக்குமா.

மாரிமுத்து Old monk கட்டிங் வாங்கிதாரேன்னு சொன்னா கூட அது 40 கிலோ மீட்டர் தூரமாய் இருந்தாக்கூட மிதிவண்டியில கொரங்கு பெடல் போட்டே போய் குடிச்சுட்டு வருபவன் என்றாலும் "உலக சரக்கு"கள் பற்றி ஒரு விரிவுரை நடத்துமளவுக்கு "விஷய" ஞானம் உள்ளவன். "தல"க்கு வந்த சக்கரை நோயினால் அவருக்கு வரும் இறக்குமதி சரக்குகளை ஒரு வித வயித்தெறிச்சலுடன் தல கோபாலிடம் கொடுத்துவிடுவார். கோபால் அதன் லேபிளில் இருக்கும் பெயரை கடினபட்டு எழுத்துக்கூட்டி படித்து மாரிமுத்துவிடம் அவற்றின் குலம் கோத்திரம் தெரிந்து சபையில் பீலா விட்டுக்கொள்வான்.

தல ஊரிலிருக்கும் போது மாரிமுத்து கோபாலை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்தால் "தல" போன பிறகு அவன் இவனை போன் பண்ணி இப்படியான இம்சைகளை கூட்டுவான்.

ஜானி வோக்கர் புளு லேபிள் நல்லா இருக்குமாய்யா ? இப்படி ஒரு நாள் கேட்டா மறுநாள் "ரெமி மார்டின் நல்லா இருந்துச்சுய்யா நேத்து; உன்னைய கூப்பிடனும்னே இருந்தேன் மறந்தே போயிட்டேன்"என்பான். மாரிமுத்து ஓசி கட்டிங்கே ஏழுமலை ஏழுகடல் தாண்டி போற ஆளாச்சா, இப்படி ஒசத்தி சரக்குன்னா சந்திரமண்டலத்துகே போவான்,இந்த வெறுப்பையெல்லாம் வச்சு அன்னைக்கு நைட் எச்சா ஒரு குவார்ட்டரு செலவாகும் .

இப்படித்தான் ஒரு நாள் போனில் அழைத்தான் கோபால்.

நேத்து நைட்டுதான்யா "தல" பாண்டியன்ல போனாரு, உன்ன கூட கேட்டாருய்யா. எதோ நர்ஸ் டிரான்ஸ்பர் கேட்டு இருந்தியாம்ல, அந்த பேப்பர கூட மறக்காம வாங்கிட்டு போனாருய்யா என்றபடி மொக்கையை போட ஆரம்பித்தவன், வழக்கம் போல் சாராயப்பேச்சை ஆரம்பித்தான். ஏன்யா சதர்ன் கம் பாடுன்னு ஒரு அயிட்டம் இருக்காய்யா? எப்படிய்யா இருக்கும். இன்னைக்கு மதியம் அதைத்தான் போடலாம்ன்னு இருக்கேன். அந்த மாணிக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி "தலை"க்கு கொடுத்துட்டு போனாரு. நல்லாருக்குமா? என்றான்.

ண்ணே அது செமையா இருக்கும்ண்ணே ! ஆனா பேரு சதர்ன் கம்பொர்ட்'ண்ணே. எங்க அண்ணன் ஒருத்தர் ஜேர்மனியில இருக்காரு அவரு வாங்கியாந்து கொடுத்தாரு.

அது எப்படிய்யா எந்த சரக்கு பத்தி கேட்டாலும் அது பத்தி புல் டீடெயில்லு சொல்லுற, உலகத்தில இருக்கிற எல்லா மேட்டரையும் டேஸ்டாவது பாத்திருக்கிற ஆச்சரியமா இருக்குய்யா என்று ஒரு மைல்டான வயித்தெறிச்சலுடன் சொன்னான் கோபால்

( ...ம்க்கும் ப்லாக் மட்டும் எழுதிப்பாரு அண்டார்டிக்கால இருந்து கூட சரக்கு வரும், ஆனா பொட்டீக்கடை'ன்னு ஒருத்தன் இருக்கான் அவன் மட்டும் மணியாட்டிகிட்டு வருவான். இங்க வந்தும் பிஃப்த் லெக் வைன்'தான் வேணும் "ஃபோர்த் பூல்" (POOL'ங்க :P ) ஸாம்பெயின்னு தான் வேனும்ன்னு அடம்புடிப்பான் அப்புறம் சைனா பஜாரு பர்மா பஜாருன்னு அலையனும் - மாரிமுத்துவின் ஆஆஆஆழ்மனசு)

இப்படியான உரையாடல் இருவேறு விதமான பொச்செரிச்சலுடன் முடிந்த அன்று மாலை மறுபடி கோபால் அழைத்தான், "அப்புறம் நண்பா, வேலையா இருக்கியா ( மாரிமுத்து கோழிக்கு மயிறு புடுங்கும் வேலையில்கூட நிலையாய் இருந்ததில்லை என்பது வேறுவிதயம், அது கோபாலுக்கும் தெரியும். ஒரு பேச்சுக்கே அப்படி கேட்பான். எப்போதெல்லாம் அப்படி கோபால் கேட்கிறானோ அப்போதெல்லாம் நொனங்க ஒரு வேலை சொல்லி மாரிமுத்துவின் பெண்டை நிமுத்தி பார்ப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு)


தொடர்வேன் -

Saturday, May 30, 2009

@ 4:06 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்


பூனைகள் மெல்ல வெளிக்கு
வருகின்றன - கண்களில்
நிலைத்த பயத்தில் மாற்றமில்லை
பின்னிரவு நேரத்தில் மெல்ல
போர்வைக்குள் நுழைந்து
தூக்கம் கலைக்கும்
அறிதுயில் நேரங்களில்
குரல் எழுப்பி சோம்பல்
முறிக்கும் அழகு
பிடிக்குமெனக்கு
.....................
.....................
மென்பஞ்சு பாதங்களில்
கூர் நகம் காட்டி
கொடும் பல் மிளிர
"புலி சேர்ந்த கல்லுளை" விட்டு
புதிதாய் வெளிவரும்
பூனைகளின் முகங்கள்
ரசிப்பதாயில்லை

Wednesday, May 27, 2009

@ 3:33 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

ஏம்மா உனக்குத்தான் சுகர் இருக்கே, நேரத்துக்கு சாப்பிடலைன்னா இனிமேல் இன்சுலின் ஊசி போடனுன்ம்னு டாக்டர் போன வாரமே திட்டிதானே அனுப்பினாரு.

பேசாம இரு செந்தி, எப்படிப்பா சாப்பிட முடியும் அது அவருதான்னு சொல்லுறங்க டீவீல, பயமா இருக்கு. வீட்டுல மூத்த புள்ள செத்து போன மாதிரி கெடக்கு மனசுக்கு... எப்படிட சாப்பிட முடியும் நெஞ்சை வந்து வந்து அடைக்குதுடா

"அப்பாயீ... அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது... நீ சாப்பிடு. அவருக்கு ஒண்ணுமில்லையாம்
சித்தா சொல்லுச்சுல்லா" அவரின் பேரன் தேற்றிக்கொண்டு இருந்தான்

( உலகு வாழும் தமிழன்னைக்கெல்லாம் அவன் தலைப் பிள்ளை - கவிஞர் தமிழ்நதி)

வேறு ஒருவரை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி வரலாமென கிளம்பி போனேன்

தொடர்பில் அவர் வராமலிருக்கவே, மனசு தவியாய் தவித்தது.

"அண்ணே நான் பத்திர எழுத்தாளர் பிரிட்டோ பேசுறேன்ணே, இங்க வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்தேன்ணே. டிவீ பார்த்தேன் உண்மையாண்ணே" விசும்பி அழும் ஒலி கேட்கிறது. இந்த நபரை ஒரு உணர்வாளராக அறிந்ததில்லை அதுவரை.

"மாதா கிட்ட வேண்டிருக்கேன்ணே ஒண்ணும் தப்பாயிடாதுண்ணே"

அப்பாடா ஒருவழியாய் தொடர்பு கிடைத்தது. நிம்மதி பிறந்தது

வீட்டுக்கு தொடர்பெடுத்தேன்.

அவரு நலமாயிருக்காரும்மா !

பின்னால் ஒரு குரல் கேட்டபடியிருந்தது.

"அப்பாயீ கவலை படாத ஒண்ணு ஆகியிருக்காது, நான் சொல்லுறேன்ல" அது அவரின் பேரன் "பிரபாகரனின்"குரல்




Wednesday, April 15, 2009

@ 1:58 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்

தமிழனாய் இருப்பதா அல்லது மனிதனாய் இருப்பதா ? "இந்தியனாய்" என்கிற கேள்வி இங்கு தேவையற்றது. "நான் எந்தளவுக்கு உலகனோ, எந்தளவுக்கு ஆசியனோ, எந்தளவுக்கு இந்தியனோ அதைவிடக் கூடுதலாய் தமிழன்" என்று பாவேந்தரின் மாணாக்கர் ஈரோடு தமிழன்பன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த கூடுதலான தமிழர்களில் ஒருவனாய் என்னை இணைத்துக்கொள்ளும் வேளையில் சிலவற்றை முன்வைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

தமிழக அரசியலில் இதுவரையில் கலைஞரின் நிலைப்பாட்டினையும் அவரது பல்வேறு செயல்களுக்கும் ஆதரவாய் எழுதியும் பேசியும் வந்த ( சமயங்களில் "கொட்டை தாங்கியும்" ) என் போன்ற கூடுதல் தமிழர்கள் இன்று கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலமிது.

"நான் நினைத்தால் என்றோ பிரதமராயிருக்க முடியும்" "என் உயரம் எனக்கு தெரியும்" இவை கலைஞர் என்கிற தனக்கிடப்பட்ட விலங்கை தானே மெச்சிக்கொள்ளும் ஒரு விசுவாச அடிமை தன்னை பற்றி சொல்லிக்கொண்ட வரிகளாகும். திமுக ஆதரித்தால் முழுமையாய் ஆதரிக்கும் எதிர்த்தால் முழுமையாய் எதிர்க்கும் என்று சொல்லி சொல்லி கூட்டணி சேர்ந்து அன்று பாரதிய ஜனதா கட்சியின் நரந்திர மோடி குஜராத்தில் 3000 ஆயிரம் முஸ்லிம்களை கொன்றொழித்த இனப்படுகொலைகளின் போது பொத்திக்கொண்டு "முழுமையாய்" ஆதரித்தது. மேற்குவங்கத்தில் சி.பி.எம் நிகழ்த்திய நந்திகிராம் படுகொலைகளை கண்டும் காணாமல் தன் கூட்டணி கட்சியின் பச்சை படுகொலைகளை "முழுமையாய்" ஆதரித்தது. இன்று தனது கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் , தனது ஆட்சிக்கும் முண்டு கொடுக்கும் காங்கிரசுக்கு ஆதரவாய் வரலாற்று துரோகமாய் தன் ரத்த சொந்தங்களை துடிக்க துடிக்க கொல்லும் காங்கிரசுக்கு ஆதராவாய் நிலையெடுத்திருக்கிறது.

ஆட்சியதிகாரம் என்கிற போதை தன் கோவணத்தையும் இழக்க வைக்கும். அன்மையில் இழந்தவர் கருணாநிதி. அவர் பன்முக கலைஞர் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை ஆனால் அவரின் அணுக்கத்தொண்டனும் அசந்து போகுமளவிற்கு சுப.தமிழ்ச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை, அன்டன் பாலசிங்கதிற்கு இரங்கல், பிரபாகரனிற்கு "சர்வாதிகாரி"பட்டம் என ஆல்ரவுண்டர் ஆட்டம் இனி தமிழ்க்களங்களில் செல்லுபடியாகாது என்பதே நிதர்சனமான உண்மை.

நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார் ? இப்படி ஒரு கேள்வி கலைஞரிடத்தில் முன்வைக்கபட்டது அதறி அவர் சொன்ன பதில் "ஃபிடல் காஸ்ட்ரொ" என்று.

பிடலை முதன் முதலாய் சந்தித்த பொழுது சே சொல்லிய முதல் அறிவுரை "துரோகிகளை ஒழியுங்கள்" என்பதுதான், இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் தேங்கி நிற்கும் திராவக சொட்டாய் கூபா என்கிற பொதுவுடைத்தேசம் உயிர்த்து இருப்பது புரட்சியின் போது "துரோகிகளை" அப்புறப்படுத்தியதுதன். இன்றளவும் கூபா ஒரு பாட்டாளிவர்க்க "சர்வதிகார"நாடாகவெ இருக்கிறது இது கலைஞருக்கும் தெரியாமலிருக்காது; என்ன இருந்தாலும் "சகோதர யுத்தம்" கூடாதுதானே. மாமன் மச்சான் யுத்தமென்றாலும் சமாதான படுத்தி விடலாம், சகோதர யுத்த பலன்களை நாளும் தன் வீட்டிலேயே பார்ப்பவர்தானே. புளித்து போன தயிர் சாதத்தையே நினைவுபடுத்துகிறது கருணாநிதி அவர்களின் 80'களில் தேங்கிப்போன ஈழம் தொடர்பான அறிக்கைகளும் விளக்கங்களும். ஆனால் அவருக்கு நடப்பது ஏதும் தெரியாமலில்லை தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டவரை என்னவென்று சொல்வது


என்னை பொறுத்தவரை ஈழப்பிரச்சினையின் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கலைஞர் என்பதே உண்மை. 80,களின் தினகரன் நாளிதழின் இரண்டாம் பக்கம் திருப்பினால் வைகோ பாராளுமன்றத்தில் முழக்கம். இந்திய அரசுக்கு கேள்வி என்றெல்லாம் செய்தி வரும். இரண்டாம் பக்கத்தில் டெசோ தொடர்பிலான அறிக்கைகள் இருக்கும். கலைஞரின் பேச்சே தமிழுணர்வு கொண்ட பல்லாயிரம் பெயர்களை ஈழத்தின் பால் கவனம் கொள்ளச்செய்தது. இவ்வளவு ஏன் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று "இலங்கைத்தமிழரை என்றும் காப்போம்" என்பதுதான். "எப்படி இருந்தா நான் இப்படியாகிட்டேன்" விவேக்கின் காமடியைப்போல் ஈழத்தமிழ்ரை இவர்கள் காங்கிரசோடு சேர்ந்து காக்கும் லட்சணம் இதுதான் போலிருக்கிறது.


தி.மு.கவில் எஞ்சியிருந்த தமிழின உணர்வாளர்களின் கடைசி நம்பிக்கையாய் கருணாநிதியின் வார்த்தையிருந்தது. என்ன இருந்தாலும் இந்திய ராணுவத்தை வரவேற்க போகமாட்டேன்னு சொன்னவருதானே என்று அந்த நம்பிக்கையும் ரஜபக்சேவை அலக்சாண்டருடன் ஒப்பீட்டு பேசிய போதே தகர்ந்து போனது. செய்திகளையும் கணிப்புகளையும் கடந்து வெற்றி பெறுவது கடந்த காலங்களில் கலைஞரின் இயல்பு. அவரே இந்திய பிராந்திய வல்லாதிக்க ஆளும் காங்கிரசு அரசின் போலி பரப்புரைகளுக்கு புதிய ஊதுகுழலாய் மாறியது கொடுமைத்தான். வஞ்சக விடம் தோய்ந்த அந்த வரிகளிலும் ஒரு வரலாற்று உண்மையை ஊருக்கு உரைத்திருக்கிறார் கருணாநிதி. என்னாதான் அலக்சாண்டர் மாவீரனாக போற்றப்பட்டாலும் அவனும் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன் தாம், போரஸ் பூர்விககுடிக்கு சொந்தக்காரன். புலிகளின் ரத்தம் கலந்த ஈழ மண்ணில் புற்களுக்கு மாறாய் இனி புலிகளே முளைப்பர். வரலாற்று அவப்பெயரை இன்று சுமந்து நிற்கும் வேளையில் அதை துடைக்கும் ஒரே வழி ஈழவிடுதலையை ஆதரிப்பதுதான். அதை விடுத்து சந்திரகாசன் போன்ற ஃபபூன்களை வைத்து காது குடையச்சொல்லி சுகம் கண்டு கொண்டிருந்தால் 60 ஆண்டுக அரசியல் வரலாறு ஒரு துரோக வரலாறாய் மாறிப்போகும்.

<ச்ட்ரொங்>இதோ தாய்த்தமிழகத்தின் கண்களுக்கு எதிரிலேயே ஒரு இனப்படுகொலை துவங்கிவிட்டது என்ன செய்யப்போகிறார் "தமிழின தலைவர்" கருணாநிதி.

Friday, March 20, 2009

@ 6:37 AM எழுதியவர்: ♥ தூயா ♥ Thooya ♥ 0 மறுமொழிகள்

Testing..

Tuesday, March 10, 2009

@ 8:46 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

தனக்கு எதிரான எந்த ஒரு சிறு முனகலை கூட பாசிசம் அனுமதிக்காது. முனகலையும் பெருமூச்சையும் கண்டாலே துடித்து போய் அதனை அடக்க முற்படும் பாசிசம், குரலினை எப்படி விடும். அப்படியொரு நிகழ்வுதான் அன்மையில் கருணாநிதி என்கிற கரங்கொண்டு பேராயம் நிகழ்த்த துவங்கியுள்ள கைதுகள். சீமான் துவங்கி கொளத்தூர் மணி அண்ணன், நாஞ்சில் சம்பத் என நீண்டு செல்லும் கைதுக்காட்சிகள். கருணாநிதியின் கரம் என சொல்லுவதால் அவர் இதில் ஒரு கருவி மட்டுமே என இங்கு நான் சொல்ல வரவில்லை. தன்னை ராவணனாகவும் கடைசியாய் இயக்கத்தை விட்டு பிரிந்து போன "உடன்பிறப்பை" வீபிடணாகவும் பொருத்தி பேசுவது கருணாநிதியின் வாடிக்கை, தன்னை ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் விளித்துக்கொண்ட கருணாநிதியே "வீபிட" வேலைகளில் இறங்கிய "எதிர்பாராத" திருப்புமுனை காட்சிக்கு இந்த தமிழினம் கொடுத்த விலை 3000 ஈழத்தமிழ் உயிர்களும் ஆற்ற இயலா கோபத்தோடு எரியூட்டிக்கொண்ட தாய்த்தமிழக உறவுகளுமே.

அன்மையில் திண்டுக்கல்லில் "தேசிய ஒருமைப்பாட்டு"க்கு எதிராய் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை ஒளிக்குறுந்தகடாய் வெளி வந்துள்ளது. இதில் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் அன்று ஆற்றிய உரையுள்ளது. ஒன்றை செய்யாதே என்றால் அதை எதிர்த்து நூறாய் செய்வதும் ஒரு போராட்ட குணமே. எந்த பேச்சு கலகமூட்ட கூடியது என அதிகார வர்க்கம் கலங்கியதோ அந்த பேச்சு, வெறும் இருநூறு பேர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இன்று ஆயிரமாயிரம் மக்களை இந்த குறுந்தகட்டின் வாயிலாக சென்றடைந்து கொண்டுள்ளது.